×

சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகில் ரூ.40 கோடியில் கட்டப்பட்டுள்ள பசுமை கட்டிடம் இன்று திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

சென்னை: சென்னை மாநகராட்சியில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பசுமை கட்டிடத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். சென்னை மாநகராட்சி வளாகத்தில் ரிப்பன் மாளிகைக்கு பின்புறம், ரூ.40 கோடி மதிப்பில், நவீன வசதியுடன் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தையை சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டு கட்டி முடித்தது. இருந்தாலும் ஒரு சில இறுதி கட்ட வேலைகள் இருந்ததால் திறக்க தாமதமானது. இந்த கட்டிடம் தரைதளம் மற்றும் நான்கு மாடிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

சென்னையின் மற்றொரு முக்கிய அடையாளமாக கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடம், நவீன கட்டிடக்கலை உத்தியுடன் பாரம்பரிய நேர்த்தியையும் ஒன்றிணைக்கும் வகையில், அருகிலுள்ள ரிப்பன் மாளிகையை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. ஊழியர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு இந்த கட்டிடம் சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. வெப்பத்தை தணிக்கும் தொழில்நுட்பம்: 95% வெப்பத்தைக் குறைக்க இந்தக் கட்டிடத்தில் ஸ்ரீ டைல்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் இயற்கையான முறையில் 75 சதவீதம் குறைக்கும் வகையில் ஏராளமான மரங்கள் நடப்பட்டுள்ளன. மேலும், 30%க்கும் அதிகமான பகுதி மரங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய மரங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த மையம் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. 90%க்கும் அதிகமான மழைநீரை சேமிக்கும் வகையிலும், தண்ணீர் பற்றாக்குறை உள்ள சென்னையில் தண்ணீரை வீணாக்காமல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

ஆற்றல் திறன் மற்றும் சேமிப்பு: ஏஏசி தடுப்புச் சுவர்கள், இன்சுலேடட் ஷீட்களால் போடப்பட்டுள்ள மேற்கூரை, நிழல் சாதனங்கள், விஆர்எப் அமைப்பு, டிஎப்ஏ அமைப்பு மற்றும் மோஷன் சென்சார்கள் போன்ற ஆற்றல் சேமிப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. சோலார் மின் உற்பத்தி உட்பட மின்சார கட்டணத்தை சுமார் 43 சதவீத குறைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இங்கு பொருத்தப்பட்டுள்ள 131 kWp திறன் கொண்ட சோலார் பிவி சிஸ்டம், ஆண்டுக்கான மொத்த மின் நுகர்வில் 34 சதவீதத்தை வழங்குகிறது. இந்த கட்டிடத்தில் உள்ள 75 சதவீத பகுதிகள் பகல் நேரங்களில் இயற்கையாக சூரிய வெளிச்சம் வரும் வகையில் கட்டப்பட்டுள்ளன.

நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள்: சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கட்டுமான பொருட்கள், அகச்சிவப்பு மற்றும் புற ஊதா ஒளிக் கதிர்களை குறைக்கும் ஜன்னல் கண்ணாடிகள், மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கட்டுமானப் பொருட்கள், குறைந்த அளவு மாசுவை வெளியேற்றும் பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. 100% கரிம கழிவு உற்பத்திக்கான ஆர்கானிக் வேஸ்ட் கன்வெர்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. விரிவான கட்டிட மேலாண்மை அமைப்பு (BMS), CO2 சென்சார்கள், EV சார்ஜிங் நிலையங்கள் மற்றும் சொட்டுநீர் பாசன அமைப்புகளுடன், கரிம கழிவுகளை உரமாக்குதல் மற்றும் கழிவுகளை பிரிக்கும் வசதிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

குறிப்பாக சுகாதாரமான, வசதியான மற்றும் உற்பத்திச் சூழலை உறுதி செய்யும் வகையில், தூசியைக் குறைக்கும் மேட்டுகள், உட்புற உடற்பயிற்சி கூடம், பசுமைக் கல்விச் சுவரொட்டிகள் மற்றும் பிற வசதிகள் உட்பட ஊழியர்களின் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு இந்த கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய பசுமைக் கட்டிடக் கவுன்சிலின் பிளாட்டினம் சான்றிதழ் அங்கீகாரத்துடன், பசுமை கட்டிட நடைமுறைகளில் தலைமைத்துவத்தை வெளிப்படுத்துகிறது. மேலும் இந்த கட்டிடம் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான கலங்கரை விளக்கமாக உள்ளது. இந்நிலையில் இந்த கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கவுள்ளார்.

* பிளாட்டினம் சான்றிதழ்
சென்னை மாநகராட்சியின் இந்த பசுமை கட்டிடம், இந்திய பசுமை கட்டிட கவுன்சிலின் புதிய பசுமை கட்டிட மதிப்பீட்டு திட்டத்தின் கீழ் மதிப்புமிக்க விருதான பிளாட்டினம் சான்றிதழைப் பெற்றுள்ளது. பசுமையான சுற்றுச்சூழல் மாசு இல்லாத நிலையான எதிர்காலத்திற்கான சிறந்த அரசு கட்டிடத்தை கட்டி 100 மதிப்பெண்களுக்கு 89 மதிப்பெண்களை பெற்று சென்னை மாநகராட்சி சிறந்த இடத்தை பிடித்துள்ளது. இதற்கான விருது மற்றும் சான்றிதழ் இந்திய பசுமை கட்டிட கவுன்சிலின் தேசியத் தலைவர் குர்மித் சிங் அரோரா, தேசிய துணைத் தலைவர் தியாகராஜன், சென்னை மண்டல தலைவர் அஜித் குமார் சோர்டியா மற்றும் ஜான்சன் கன்ட்ரோல்ஸ் இந்தியா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அருண் அவஸ்தி ஆகியோர் முன்னிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது.

The post சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகில் ரூ.40 கோடியில் கட்டப்பட்டுள்ள பசுமை கட்டிடம் இன்று திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,M. K. Stalin ,Ribbon House ,Dinakaran ,
× RELATED தமிழ் வளர்ச்சித் திட்டங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு